நீதிக்கதைகள்

பிரம்மபுரம் என்ற ஒரு ஊர் இருந்தது. அங்கு பொன்னொளிப் பித்தர் என்ற ஒரு அப்பாவி ஆன்மீகவாதி இருந்தார். அவர் பொன்னொளி மடம் என்ற பூரண யோக மடத்தை ஆரம்பித்து நடத்தி வந்தார்.

அவருக்கு உதவியாக அவருடனே  மக்கானந்தர், கமலக்கூத்தர் என்ற இரண்டு நண்பர்கள் இருந்தனர். இருவருமே பொன்னொளிப் பித்தரின் மீது மிகுந்த அன்பும், பக்தியும் கொண்டவர்கள்.

மக்கானந்தருக்கு ஆன்மீகம் என்றால் மிகவும் பிடிக்கும். ஆன்மீக முறைகளை பின்பற்ற விரும்புவார். எல்லோருக்கும் நல்லவர். மிகவும் அப்பிராணி. கருணை மிகுந்தவர். ஆனால் நடைமுறை அறிவோ, லௌகீக சாமர்த்தியமோ சிறிதும் இல்லாதவர்.

பொன்னொளிப் பித்தரிடம் ஒரு சீடன் கேட்டான், "என் அகத்தில் எதுவுமே இல்லை. என்ன செய்வது?"

"எல்லாவற்றையும் வெளியே கொட்டி விடு," என்றார் பொன்னொளிப் பித்தர்.

"என்ன இது! நான்தான் என்னுள் ஒன்றுமே இல்லை என்கிறேனே?" என்றான் சீடன் .

"அப்படியானால், எல்லாவற்றையும் சுமந்து கொண்டேயிரு!" என்றார் பொன்னொளிப் பித்தர்.

(மறுஆக்கம் செய்யப்பட்ட சென் கதை)

ஒரு நாள் இரவு பொன்னொளிப் பித்தர் லைப் டிவைன் வாசித்துக் கொண்டிருந்தபோது அவர் கழுத்தில் கத்தியை வைத்த திருடன் ஒருவன் "பணத்தை எல்லாம் கொடு," என்றான்.

"பணத்தைக் கேட்கும்போது கத்தியை எல்லாம் ஏனப்பா கழுத்தில் வைக்கிறாய்? எல்லா பணமும் அலமாரியில்தான் இருக்கிறது. எடுத்துக் கொள்," என்றார் பொன்னொளிப் பித்தர்.

திருடன் எல்லா பணத்தையும் எடுக்கும் போது "தம்பி, நாளைக்கு வரி கட்ட வேண்டும். நூறு ரூபாய் வைத்து விட்டுப் போ,"என்றார். 

பொன்னொளிப் பித்தரின் மடத்தில் ஒரு சீடன் திருடி விட்டான். மற்ற சீடர்கள் அவனைப் பிடித்து பித்தரிடம் இழுத்து வந்தனர். "சரி, நான் பார்த்துக் கொள்கிறேன்," என்றார் பொன்னொளிப் பித்தர்.  ஆனால் திருடியவனை ஒன்றும் செய்யவில்லை.

சில நாட்கள் கழித்து அதே சீடன் மீண்டும் திருடினான். மற்ற சீடர்கள் அவனைப் பிடித்து பித்தரிடம் மீண்டும் இழுத்து வந்தனர். "சரி, நான் பார்த்துக் கொள்கிறேன்," என்றார் பொன்னொளிப் பித்தர்.  ஆனால் திருடியவனை ஒன்றும் செய்யவில்லை.