ஒரு நாள் இரவு பொன்னொளிப் பித்தர் லைப் டிவைன் வாசித்துக் கொண்டிருந்தபோது அவர் கழுத்தில் கத்தியை வைத்த திருடன் ஒருவன் "பணத்தை எல்லாம் கொடு," என்றான்.
"பணத்தைக் கேட்கும்போது கத்தியை எல்லாம் ஏனப்பா கழுத்தில் வைக்கிறாய்? எல்லா பணமும் அலமாரியில்தான் இருக்கிறது. எடுத்துக் கொள்," என்றார் பொன்னொளிப் பித்தர்.
திருடன் எல்லா பணத்தையும் எடுக்கும் போது "தம்பி, நாளைக்கு வரி கட்ட வேண்டும். நூறு ரூபாய் வைத்து விட்டுப் போ,"என்றார்.
"சரி," என்று கூறி விட்டு நூறு ரூபாயை வைத்து விட்டு திருடன் வெளியேறும் போது "என்னப்பா மனிதன் நீ! பணம் தந்தேனே நன்றி சொன்னாயா?" என்று கேட்டார் பொன்னொளிப் பித்தர்.
"நன்றி ஐயா," என்று சந்தோஷமாகக் கூறிவிட்டு சென்ற திருடன் வழியில் காவலரிடம் சிக்கிக் கொண்டான்.
பொன்னொளிப் பித்தரை நீதிபதி அழைத்து விசாரித்தார்.
"இவர் பண உதவி கேட்டார். வரி கட்ட நூறு ரூபாய் வைத்துக் கொண்டு மீதி எல்லாவற்றையும் தந்தேன். போகும்போது நன்றி கூறி விட்டுச் சென்றார்," என்றார் பொன்னொளிப் பித்தர்.
"இவன் திருடனில்லை," என்று தீர்ப்பு சொன்னார் நீதிபதி.
திருடன் பொன்னொளிப் பித்தரின் சீடனாகி விட்டான்.
(மறுஆக்கம் செய்யப்பட்ட சென் கதை)