சென்னை திரும்பியபின் புருஷண்ணார் மட்டும் என்னிடம் ‘என்னடா, முடித்தாகி விட்டதா?’ என்று கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் போய்விட்டார். மதுவண்ணார் எதுவும் கேட்கவில்லை. அண்ணார்கள் தாத்தாவிடம் எல்லா விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டிருப்பார்கள். அதனால்தான் எவரும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை என்று நினைத்துக் கொண்டேன்.
ஜவுளி அண்ணி ‘பெண் பிடிக்கவில்லை என்று தாத்தாவிடம் சொல்லிவிட்டாயா?’ என்று கேட்டார்.
‘பிடித்திருக்கிறது என்று சொல்லி விட்டேன்’ என்றேன்.
‘கிறுக்கு பிள்ளையே! ஏன் அப்படி சொன்னாய்?’ என்றார் ஜவுளி அண்ணி.
‘பிடித்திருக்கிறதே’ என்றேன்.